திருவள்ளூர் அருகே பெண் குழந்தை ஏரிக்கரையில் வீச்சு..!!
திருவள்ளூர் அடுத்த ஈக்காட்டிலிருந்து புண்ணப்பாக்கம் செல்லும் வழியில் உள்ள ஏரிக்கரையோரம் பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் பெண் பச்சிளம் குழந்தை கிடந்தது. இதை பார்த்த கிராம மக்கள் புல்லரம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குழந்தைக்கு பச்சிளங்குழந்தை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 கிலோ 800 கிராம் எடை கொண்ட இந்த பெண் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பெண் குழந்தை என்பதால் வீசிச் சென்றார்களா? அல்லது தகாத உறவில் பிறந்திருக்குமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் இத்துடன் 3 இடங்களில் பச்சளிங் குழந்தைகள் வீசப்பட்டு அதனை தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இது போன்று பச்சிளங் குழந்தைகளை குப்பைத் தொட்டியிலும், மருத்துவமனை வாசலிலும் வீசிச் செல்வது தொடர் கதையாக இருப்பதால் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இதுபோன்ற குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Average Rating