மோடியை தவறாக விமர்சித்ததாக பிரகாஷ்ராஜ் மீது வழக்கு…!!
பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
கடந்த மாதம் 5-ந்தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் தனது பத்திரிகையில் வலதுசாரி கருத்துக்களை விமர்சித்து எழுதியுள்ளார். இதனால் அவர் மீது ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது. அவரது படுகொலைக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்த பிரகாஷ் ராஜ், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடியிருந்தார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரகாஷ்ராஜ் இது குறித்து பேசும்போது,
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை சமூக வலைதளங்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் யார் எங்கு இருக்கிறார்கள்? அவர்களது சித்தாந்தம் என்ன? என்று எல்லோருக்கும் தெரியும். இந்த கொலையை கொண்டாடுவது மிகவும் கொடூரமானது. அவர்கள் பிரதமர் மோடியை தவிர வேறு யாரையும் பின்பற்றாதவர்கள்.
மோடி தனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறார். இதன் மூலம் அவர் என்னை விட மிகப்பெரிய நடிகராக முயற்சித்து வருகிறார் என்பதை நிரூபித்து உள்ளார்.
பிரதமர் இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. தனது ஆதரவாளர்களில் சிலர் கொடூரமாக நடப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் முயற்சி செய்கிறார் என்றார்.
இவரது பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
Average Rating