ஆண்கள் மட்டும் கொண்டாடும் திருவிழா..!!
பெண் தெய்வத்தை ஆண்கள் மட்டுமே வழிபடும் விநோத திருவிழா கமுதி அருகே இரவு தொடங்கி விடியவிடியக் கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ளது முதல்நாடு கிராமம். இங்கு உள்ள புதுக்குளம் கண்மாய்கரை அருகே எல்லைப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் திருவிழா நடந்து வருகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் 5 சகோதரர்களுடன் பிறந்த பெண் ஒருவரை அவரது அண்ணியார்கள் துன்புறுத்தியதாகவும் இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண் ஊர் எல்லையைக் காக்கும் முப்பிடாதி அம்மன் கோயில் அருகே வந்தபோது மாயமானதாகவும், பின்னர் அக்கிராம மக்களின் கனவில் தோன்றிய அந்தப் பெண், ”நான் இந்த இடத்தில் தெய்வமாக இருந்து ஊரைக் காப்பாற்றுவேன். ஆண்டுக்கு ஒரு முறை எனக்குக் கிடா வெட்டிப் படையலிட்டு ஆண்கள் மட்டுமே வந்து வழிபட வேண்டும். பெண்கள் அந்த நேரத்தில் இங்கு வரவே கூடாது” எனக் கூறியதன் அடிப்படையில் பல ஆண்டுகளாக இந்தத் திருவிழா நடந்துவருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா சனிக்கிழமை (அக்டோபர் 07) கொண்டாடப்பட்டது.
இதில் ஆட்டுக்கறிச் சோறு சமைக்கப்பட்டுப் பனை ஓலையில் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. இந்தத் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். பனை ஓலையிலேயே விருந்து சாப்பிடவேண்டும். எக்காரணம் கொண்டும் ஆட்டுக்கறிச் சோறு, பூஜை பொருட்களை வீட்டுக்குக் கொண்டுசெல்லக் கூடாது என்பதால் மீதமாகியிருந்த உணவு அப்பகுதியிலேயே மண்ணில் புதைக்கப்பட்டது.
விடிய விடிய நடந்த இந்தத் திருவிழாவில் முதல்நாடு கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
Average Rating