வளவனூர் அருகே இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது..!!
சேலம் வி.ஐ.பி. நகரை சேர்ந்த 38 வயதுடைய பெண், விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே ராம்பாக்கம் காலனியில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு வந்திருந்தார். இரவு இவர் அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்றார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தினேஷ், வினோத்குமார், பாபு, பிரித்விராஜ், ரஜினிசுமன் ஆகியோர் பின்தொடர்ந்து சென்றனர். அந்த பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்தனர்.
பின்னர் அவர்கள் அந்த பெண்ணிடம் ஆபாச படத்தை காண்பித்து இதனை ‘வாட்ஸ்-அப்’ பில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டினர். மேலும் அந்த பெண்ணின் வாயில் துணியை திணித்து மறைவான இடத்துக்கு குண்டுகட்டாக தூக்கிச்சென்றனர். அங்கு அவரை பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து செல்போனில் எடுத்த ஆபாச படங்களை தினேஷின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த பிரபாகரமூர்த்தி (26) ‘வாட்ஸ்-அப்பில்’ வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர், வளவனூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆபாச படத்தை ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிட்ட பிரபாகரமூர்த்தியை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.
இளம் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த 5 பேரை தேடி வந்தனர். அவர்களில் தினேஷ் (19), வினோத்குமார் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் தலைமறைவாக உள்ள பிரித்விராஜ், ரஜினி சுமன், பாபு ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating