தீவிரவாதிகள் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கவர்னர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்கொலை தீவிரவாதிகள் தாக்குதலில் மாநில கவர்னர் ஒருவர் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தீவிரவாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பை அமெரிக்க ராணுவத்திடம் இருந்து பெற்ற நேட்டோ ராணுவம் , தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இரு தரப்புக்கும் தெற்கு ஆப்கானிஸ்தானத்தில் நடந்த மோதலில் 94 தலீபான் தீவிரவாதிகள் பலியானார்கள்.
இதற்கிடையில் தலீபான் தாக்குதலில் பக்தியா மாநில கவர்னர் பலியானார். அவர் பெயர்ஹக்கீம் தனிவால். 60 வயதானஅவர் கவர்னர் ஆவதற்கு முன்பு கர்சாய் மந்திரிசபையில் மந்திரியாக இருந்தவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்து இருந்தார்.
தற்கொலை தீவிரவாதி
அவர் சமீபகாலமாக கவர்னராக செயல்பட்டு வந்தார். அவர் தன் அலுவலகத்தில் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அவருடன் அவரது உறவினர் மற்றும் பாதுகாவலர் ஆகியோரும் வெளியே வந்தனர். அப்போது வெளியே வாசலில் ஒரு தற்கொலை தீவிரவாதி அவருக்காக காத்திருந்தான். அவர் வெளியே வந்ததும் அவன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தான். இதில் கவர்னர் உடல் சிதறி இறந்தார். அவருடன் வெளியே வந்த 2 பேரும் பலியானார்கள். தீவிரவாதியும் செத்தான்.