முல்லைத்தீவை படையினர் சுற்றி வளைத்துள்ளனர்! பிரபாகரனை உயிருடன் பிடிக்கத் திட்டம்! -இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறிவிப்பு
முல்லைத்தீவு பிரதேசதம் படையினரால் சுற்றி வளைக்கப் பட்டுள்ளதாகவும் அங்கு ஒளிந்திருப்பதாக நம்பப்படும் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு நேற்று அவர் வழங்கிய செவ்வியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பாதுகாப்புப் படையினரின் 56, 57, 58 மற்றும் 59ஆவது படையணிகள் முல்லைத்தீவுப் பிரதேசத்தை நான்கு திசைகளுடாகவும் முன்னேறி சுற்றி வளைத்துள்ளன. இதனால் தப்பியோடுவதற்கு வழியின்றி பிரபாகரன் அங்குள்ள பதுங்கு குழியில் ஒளிந்திருக்கிறார். எனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் புலிகளின் வன்போபேஸ் முகாம் அமைந்துள்ள பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளனர். இந்த முகாம் இந்தியப் படையினர் இலங்கைக்கு வந்தபோது பிரபாகரன் ஒளிந்து கொள்வதற்காக அமைக்கப்பட்டதாகும். இதில் சிறுசிறு பாதுகாப்பு அரண்கள் பல அமைந்துள்ளன. வடக்கில் புலிகளினால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் 800 கிலோ மீற்றர் நிலப்பரப்பை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். இறுதி இலக்கை அடைவதற்காக படையினர் இன்னும் 21 கிலோ மீற்றர் நிலப்பரப்பையே மீட்க வேண்டியுள்ளனர். முல்லைத்தீவுப் பிரதேசத்தை சுற்றி வளைத்துள்ள படையினருக்கு உதவும் வகையில் மேலும் இரண்டு விசேட படையணிகள் இணைக்கப்பட்டுள்ளன. வடக்கில் படையினரின் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாத காரணத்தினால் புலிகள் தெற்கில் குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கிழக்கைப் போன்றே வடக்கையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க அரசும் படையினரும் உறுதி பூண்டுள்ளனர். இப்போராட்டத்தில் படையினர் வெற்றி பெறுவது நிச்சயமாகும் என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating