பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் விடுதலைப் புலிகளை எதிர்க்கிறோம் – ஜெயலலிதா
இலங்கை வாழ் தமிழர்கள் சம உரிமைகளோடும் நிம்மதியுடனும் இலங்கையில் வாழ வேண்டும் என்பதே அஇஅதிமுகவின் நிலைப்பாடு என்றும், அதேசமயம் விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அதனால் அவர்களை அதிமுக தொடர்ந்து எதிர்ப்பதாகவும் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாநில ஆட்சியை பறிகொடுத்த பிறகு முதன்முறையாக அதிமுகவின் செயற்குழுவின் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடியது.
இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதற்கு தானே காரணம் என்று கூறினார்.
அன்று முதல் அவர்களை எதிர்ப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், ஆனால் விடுதலைப்புலிகள் குறித்து தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெளிவுபடுத்தவேண்டும் என்றும் ஜெயலலிதா கோரிக்கை வைத்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை அதிமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து ஆதரிப்பது பற்றி கேட்டபோது, தம் முன்னிலையில் வைகோ விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசவில்லை என்றார் ஜெயலலிதா.