தசாவதாரத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு -தசாவதாரம் நாளை உலகெங்கும் ரிலீஸாகிறது
தசாவதாரம் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து தசாவதாரத்திற்கு அனைத்துத் தடைகளும் நீங்கி விட்டன. கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள பிரமாண்டப் படமான தசாவதாரம் நாளை உலகெங்கும் ரிலீஸாகிறது. இப்படத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. அனைத்தையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில், சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ தர்ம சனாதன் கழகம் என்கிற அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், சைவ-வைணவ பிரிவினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையிலும் படம் இருப்பதாகவும், எனவே தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் அரிஜித் பசாயத், நவ்லோகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணை செய்தது. பின்னர் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர். நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், மனுதாரர் முதலில் படத்தைப் பார்க்க வேண்டும். அதற்கு முன்பே படத்தைத் தடை செய்யக் கோருவது சரியல்ல என்று கூறியிருந்தனர். தசாவதாரம் படத்திற்கு இருந்து வந்த கடைசித் தடையும் தற்போது நீங்கி விட்டது. இதன் மூலம் தசாவதாரம் படத்தை திரையிடுவதற்கு தற்போது எந்தத் தடையும் இல்லை.
Average Rating