போரை நிறுத்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் -விடுதலைப்புலிகள் `திடீர்’ அறிவிப்பு
போரை நிறுத்துவதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2002-ம் ஆண்டு போர்நிறுத்தம் ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இருதரப்புக்கும் இடையே சுவீடனில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் விடுதலைப்புலிகள் இதை நிராகரித்தனர். இதனால் அம்முயற்சி தோல்வி அடைந்தது.
அதன்பின்னர் இலங்கையில் கடும் சண்டை மூண்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேறினர்.
திடீர் அறிவிப்பு
இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயார் என்று விடுதலைப்புலிகள் திடீரென்று அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக அந்த அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-
தமிழர் தாயகத்தில் இலங்கை ராணுவத்தின் தாக்குதலும், ஆக்கிரமிப்பும் தொடரும் நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அர்த்தம் அற்றதாகி விட்டதாக நாங்கள் கருதுகிறோம். இருப்பினும், சமாதான தூதர்களும், சர்வதேச சமுதாயமும், அமைதி முயற்சிகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளன. ஆகவே, நாங்களும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம்.
பேச்சு நடத்த தயார்
போரை நிறுத்துவதற்காக, இலங்கை அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால் ராணுவம் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும். போர் நிறுத்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும். அப்படி செய்தால்தான் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு பிரகாசமாக அமையும்.
அதை விட்டுவிட்டு, தமிழர் தாயகத்தின்மீது ராணுவம் போரை தொடர்ந்தால், தமிழர்களை துயரத்தில் ஆழ்த்தினால், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் போர் பரவுவதை தவிர்க்க முடியாது. இது முழு அளவிலான போராக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்று நான் அஞ்சுகிறேன். இவ்வாறு எஸ்.பி.தமிழ்ச்செல்வன் கூறினார்.