விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா..!!
சினிமா சிலருக்கு ரத்த சம்பந்தமாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ள எவரோ ஒருவர் திரை உலகில் இருந்து இருப்பதால், அவர்களது திரைப்பயணம் சுலபமாக இருக்கும் என்பது பொதுவான ஒரு கருத்து. பிரபலமானவரின் உறவு என்றால் அவர்களின் வழி தடம் எளிதாக இருக்காது, மாற்றாக கடினமானதாகவே இருக்கும்.
அந்த வகையில், மெகா ஸ்டார் சீரஞ்சீவியின் உறவுக்கார பெண்ணும், பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகளுமான நிகாரிகா கோனிடேலா தற்போது தமிழ் திரை உலகில் அறிமுகமாக உள்ளார். விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் நிகாரிகா கதாநாயகியாக நடித்துள்ளார். ஆறுமுக குமார் இயக்கும் இந்த படத்தை ‘7c’s என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்’ மற்றும் ‘அம்மே நாராயணா என்டர்டெயின்மெண்ட்’ இணைந்து தயாரித்துள்ளது.
இப்படம் குறித்து நிகாரிகா பேசுகையில்,
”தமிழில் எனது முதல் படமே இவ்வளவு பெரிய படமாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி. சிறந்த அணி, சிறப்பான கதை கிடைத்துள்ளது. விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் போன்ற எளிமையான நடிகர்களை பார்ப்பது அரிது. அவர்களுடன் பணிபுரிந்தது அருமையான அனுபவம். இப்படத்தில் எனது கதாபாத்திரம் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் போன்று இருக்காது.
எனது இந்த கதாபாத்திரம் இரண்டு பெயர்களில் வரும். ஏன் இரண்டு பெயர்கள் என்பதை படம் பார்க்கும் பொழுது நீங்களே அறிவீர்கள். எனது குடும்பத்தார் எனக்கு அளிக்கும் ஆதரவும், ஊக்கமும் அளவற்றது. இது போன்ற ஒரு குடும்பம் அமைந்துள்ளதால் நான் பெரிய அதிர்ஷ்டசாலி. ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தையும் எனது கதாபாத்திரத்தையும் தமிழ் சினிமா ரசிகர்கள் ரசித்து கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்”
என்றார்.
Average Rating