ஆனையிறவு வரை எல்.ரீ.ரீ.ஈ. யினர் பின்வாங்கினால்…-அமைச்சர் ரம்புக்வெல்ல
சம்பூரில் எல்.ரீ.ரீ.ஈ. யினர் யுத்தம் புரியவில்லையென்றும் நல்லெண்ணத்துடன் பின்வாங்கிச் சென்றனர் என்றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். அந்த நல்லெண்ணத்துடன் அவர்கள் ஆனையிறவு வரை பின்வாங்கிச் சென்றால் சமாதான முன்னெடுப்புக்களை அது மிகவும் பலப்படுத்தும் என அரசாங்க பாதுகாப்புத்துறை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
சகல முனைகளிலும் தோல்வியைத் தழுவிவரும் புலிகள் சர்வதேச ரீதியில் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான உணவு விநியோகத்தினை தடைசெய்யும் அவாகள் தமிழ் மக்கள் பட்டினியில் வாடுவதாக உலக நாடுகளில் பொய்ப்பிரசாரம் செய்கின்றனர்.
முகமாலையில் படையினரின் முன்னரங்குகள் மீது புலிகள் தாக்குதலை ஆரம்பித்த பின்னர்கூட தமிழ் மக்களுக்கு முடிந்த வகையில் சகல உதவிகளையும் அரசாங்கம் வழங்கியது.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறத் தயாராகவிருந்த 795 பொது மக்கள் கடற்படையினரின் சக்தி கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டனர். இதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு வழங்க மறுத்துவிட்டது. மக்கள் நெருக்கடிக்குள்ளாகும் நேரங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வது வியப்புக்குரியது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.