துபாயில் யாஷ்சோப்ரா ‘தீம் பார்க்’
பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யாஷ் சோப்ரா பிலிம்ஸ் நிறுவனம், துபாயில் பிரமாண்ட பொழுதுபோக்குப் பூங்காவை அமைக்கிறது. துபாய் இன்பினிட்டி ஹோல்டிங்ஸ் இந்த நிறுவனத்தை அமைத்துத் தரவுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் யாஷ் சோப்ராவும், துபாய் இன்பினிட்டி ஹோல்டிங்ஸ் நிறுவன தலைமை செயலதிகாரி சமீரா அப்துல் ரஸ்ஸாக்கும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தன்படி, துபாய் இன்பினிட்டி நிறுவனம், ஒய்.ஆர்.எப். என்டர்டெய்ன்மென்ட் மாவட்டத்தை, யாஷ் சோப்ராவுக்காக உருவாக்கித் தரும். இங்கு பொழுது போக்கு பூங்காக்கள், திரையரங்கம், ஹோட்டல் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறும். இதுகுறித்து யாஷ் சோப்ரா கூறுகையில், துபாயில் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ந்து வுகிறது. 2015ம் ஆண்டில் துபாய் உலக மக்கள் அனைவரும் வந்து போகும் இடமாக மாறும். அதை மனதில் வைத்தே இந்த பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்படவுள்ளது என்றார். யாஷ் சோப்ரா பொழுதுபோக்கு வளாகத்தின் முதல் பகுதி, 2012ம் ஆண்டில் திறந்து வைக்கப்படும். கடந்த ஆண்டு, யாஷ் சோப்ரா நிறுவனமும், அமெரிக்காவின் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸும் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன. அதன்படி இந்திய ரசிகர்களுக்காக வால்ட் டிஸ்னியுடன் இணைந்து யாஷ்சோப்ரா நிறுவனம் அனிமேஷன் படங்களைத் தயாரிக்கும். இதன் முதல் தயாரிப்பான ரோட்சைட் ரோமியோ வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating