‘ரான்பாக்சி’ அதிபருக்கு லக்: வாங்கியது ரூ.2.5 லட்சம் விற்றதோ ரூ.9,500 கோடி
நாட்டின் பிரபல மருந்து நிறுவனங்களில் ஒன்றான ரான்பாக்சியை இரு நாட்களுக்கு முன்பு வாங்கிவிட்டது ஜப்பானின் டாய்ச்சி சாங்க்யோ நிறுவனம். இந்த நிறுவனம் 56 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 2.5 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இப்போது ரூ.9 ஆயிரத்து 576 கோடிக்கு கைமாறி உள்ளது. 56 ஆண¢டுகளுக்கு முன்பு பாய் மோகன் சிங், இந்நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கினார். பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த இவர், இங்கு பைனான்ஸ் தொழில் செய்து வந்தாராம். 1950களில் குர்பாக்ஸ் சிங் என்பவருக்கு கடன் அளித்தார். குர்பாக்ஸ் சிங்தான் ரான்பாக்சி மருந்து நிறுவனத்தை தொடங்கியவர். அது போக டெல்லியில் ஒரு மருந்து கடையும் ஜப்பான் மருந்து கம்பெனியின் ஏஜென்சியும் நடத்தி வந்தார். ஒருகட்டத்தில், பாய் மோகன் சிங்குக்கு குர்பாக்ஸ் அளிக்க வேண்டிய தொகை ரூ.2.5 லட்சமானது. அதை திருப்பித் தருவதற்கு பதிலாக, ரான்பாக்சி நிறுவனத்தில் தனக்கிருந்த பெரும்பான்மை பங்குகளை அளித்துவிட்டார் குர்பாக்ஸ். ஆனால் அதன் பின்புதான் தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்தார். காரணம், ரான்பாக்சி மருந்து நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்தது. நிறுவனத்தை மீண்டும் பெறும் நோக்கத்தில், நீதிமன்றத்தில் வழக்குக்கு மேல் வழக்காக தொடுத்தார் குர்பாக்ஸ். ஆனால் பலனில்லை. 1968ம் ஆண்டிலேயே ரூ.1 கோடிக்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமானது ரான்பாக்சி. பாய் மோகன் சிங்கின் மகன் பர்விந்தரும் கம்பெனியில் தீவிரமாக செயல்பட்டார். குர்பாக்ஸ் விட்ட சாபமோ என்னவோ, தந்தைக்கும் மகனுக்கும் முட்டிக் கொண்டது. விளைவு… மகன் கை ஓங்கியது. தந்தை டம்மியானார். பர்விந்தரின் நிர்வாகத்தில் அதிவேக வளர்ச்சி அடைந்தது ரான்பாக்சி. புற்றுநோயால் அவர் இறந்தபிறகு மகன் மால்விந்தரின் பொறுப்பில் நிறுவனம் நடந்து வந்தது. அது இப்போது ரூ.9,576 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
Average Rating