அரசியலில் குதிக்கிறார் பெனாசிரின் மகள்; தாயின் இலட்சியத்தை நிறைவேற்ற சபதம்
மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகள் பக்தவர் பூட்டோவும் அரசியலில் குதிக்க ஆயத்தமாகி வருகிறார். எனது தாயாரின் இலட்சியத்தை நிறைவேற்றுவேன். விரைவில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என பக்தவர் பூட்டோ தெரிவித்துள்ளார். பெனாசிர் பூட்டோ கடந்த டிசம்பரில் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவரது மகன் பிலாவல் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். பெனாசிரின் கணவர் ஆஷிப் அலி சர்தாரியும் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் டுபாயில் கல்வி கற்றுவரும் பக்தவர் பூட்டோவும் (வயது 17) அரசியலில் குதிக்க தயாராகி வருகிறார். இதற்கான முயற்சிகளை அவர் ஆரம்பித்திருப்பதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பக்தவருக்கு அரசியலில் ஆர்வம் இருப்பது அவரது சமீபத்திய பேச்சுக்கள் மூலம் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் தொலைக்காட்சி அலைவரிசையொன்றுக்கு அவர் சமீபத்தில் வழங்கிய நேர்காணலில்; எனது தாயார் விட்டுச் சென்ற பணிகளை தொடர சபதம் எடுத்துள்ளேன் அவரது இலட்சியத்தை நிறைவேற்றுவேன் பாகிஸ்தான் மக்களுக்க கண்டிப்பாக என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். அரசியல் மூலம் உதவுவதா அல்லது வேறு வழிகளில் உதவுவதா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. பாகிஸ்தானிலுள்ள இளம் பெண்கள் பலர் என்னை முன்மாதிரியாகக் கொண்டு செயற்படுவது எனக்கு பெருமையளிக்கிறது. என்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. பெண்கள் தங்களால் எது முடியுமோ அதைச் செய்ய வேண்டும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண் என்பதால் எனது பெற்றோர் எந்த பாரபட்சமும் காட்டவில்லை. என் சகோதரருக்கு எந்தவிதமான வசதிகள் கிடைத்ததோ அதே விதமான வசதிகள் எனக்கும் கிடைத்தன. பெண்களுக்கு கல்வி முக்கியம். ஆண்களுக்கு பெண்கள் சிறிதும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க கல்வி அவசியம். இதை அனைத்து பெண்களும் உணர வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
Average Rating