பிரதான நோக்கம் தோல்வியடைந்ததால் இஸ்ரேலிய ராணுவ தளபதி விலகல்
லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான நோக்கங்கள் எதுவும் நிறைவேறாததால் இஸ்ரேலிய ராணுவத் தளபதி ஜெனரல் யுதி ஆடம் புதன்கிழமை பதவி விலகினார். இஸ்ரேலின் வடக்குப் படைப் பிரிவுக்கு தலைமையேற்று தாக்குதலில் ஈடுபட்ட யுதி ஆடமின் ராஜிநாமாவை தலைமைத் தளபதி டான் ஹலுட்ஸ் ஏற்றுக் கொண்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பினரை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு லெபனான் மீது 34 நாட்கள் இஸ்ரேல் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவிப் பொதுமக்கள் 1200 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டடங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டன.
சர்வதேச சமூகத்தின் கண்டனங்களுக்கு உள்ளான இந்தத் தாக்குதல், இஸ்ரேல் நினைத்ததற்கு மாறாக ஒரு மாதத்திற்கு மேலும் இழுத்துக்கொண்டு போனது. 162 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு, இஸ்ரேலின் பிரதான நோக்கங்கள் எதுவும் நிறைவேறவில்லை.
இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இஸ்ரேல் செலவிட்ட தொகை ரூ.25 ஆயிரத்து 650 கோடி. இருப்பினும் ஹிஸ்புல்லாவினர் சிறைப்பிடித்துச் சென்ற இஸ்ரேல் ராணுவ வீரர்களை மீட்க முடியவில்லை. இதனால் ராணுவத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து பதவி விலகியுள்ள முதல் இஸ்ரேலிய அதிகாரி ஆடம்.