நியுசிலாந்து நாட்டில் இந்தியரை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது
பஞ்சாபைச் சேர்ந்த நவ்தேஜ்சிங் (வயது 30) என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பத்துடன் நியுசிலாந்து நாட்டில் குடியேறினார். 3 மாதங்களுக்கு முன்பு, ஆக்லாண்டு நகரில் அவர் ஒரு மதுக்கடையை தொடங்கினார். இந்நிலையில் கடந்த வாரம் அவரை ஒரு கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டது. ஆஸ்பத்திரியில் 36 மணி நேரம் உயிருக்கு போராடிய அவர் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, இக்கொலை தொடர்பாக அனிடேலியா சான் கீ (வயது 20), டினோ பாமேலி பெலிஸ் (வயது 17), மெபிபோசடா சான் கீ (வயது 24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை ஆகஸ்டு 6-ந் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி டேவிட் ஹார்வே உத்தரவிட்டார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள், கொலையாளிகள் அணிந்திருந்த உடைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். கொலையின்போது உடனிருந்த மேலும் 2 பேரை சரண் அடையுமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
Average Rating