இலங்கை தூதரக அதிகாரி வீட்டில் செல்போன்கள் திருட்டு: புகார் கொடுக்க மறுப்பதோடு, வீட்டில் உள்ளவர்களை விசாரிக்க கூடாது என்கிறார்
சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கும் இலங்கை தூதரக அதிகாரி வீட்டில் 2 செல்போன்கள் திருட்டு போய் விட்டது. ஆனால் இது தொடர்பாக புகார் கொடுக்க மறுப்பதோடு, வீட்டில் உள்ள யாரையும் விசாரிக்க கூடாது என்று போலீசாருக்கு தூதரக அதிகாரி தடை போட்டு விட்டார். சென்னை புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா ரோட்டில் வசிப்பவர் அம்சா (வயது 50). இவர் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஹை-கமிஷனராக உள்ளார். நேற்று முன்தினம் அதிகாரி அம்சா சென்னை வேப்பேரி போலீசாரை போனில் கூப்பிட்டு, தனது வீட்டுக்கு வரச்சொன்னார். உடனே துணை கமிஷனர் தர்மராஜன், உதவி கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் போலீஸ் படையுடன் விரைந்து சென்று தூதரக அதிகாரியிடம் விசாரித்தார்கள். அப்போது அவர், தனது வீட்டு மாடியில் வைத்திருந்த 2 செல்போன்களை காணவில்லை என்றும், அவை திருட்டு போய் இருக்கலாம் என்று கருதுவதாகவும் தெரிவித்தார். ஆனால் இது தொடர்பாக புகார் எதுவும் கொடுக்க மாட்டேன் என்றும் அவர் கூறி விட்டார். வீட்டை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். எனவே வெளி ஆட்கள் யாரும் திருடி இருக்க வாய்ப்பு இல்லை என்றும், வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரர்களை விசாரிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்தனர். “எனது வீட்டு வேலைக்காரர்கள் நேர்மையானவர்கள் என்றும், அவர்களிடம் விசாரணை நடத்த தேவை இல்லை என்றும், செல்போன் ரகசிய குறியீட்டு எண்ணை வைத்து திருட்டு போன செல்போன்களை கண்டுபிடியுங்கள்’ என்றும் அதிகாரி அம்சா கூறி விட்டாராம். இதனால் போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.
Average Rating