உலகத் தமிழர் இயக்கத்தை மட்டுமல்ல, புலிகளின் ஏனையஅமைப்புகளையும் கனடிய அரசு தடைசெய்ய வேண்டும் -ராகுலன்
காலம் தாழ்த்தியென்றாலும் புலிகளின் பினாமி அமைப்பான உலகத் தமிழர் இயக்கத்தைத் தடை செய்து, அங்கு வாழ்கின்ற இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களுக்கு கனடிய அரசாங்கம் பெரும் நன்மையொன்றைச் செய்துள்ளது. ஏனென்றால் இந்த உலகத்தமிழர் இயக்கம் கடந்த 25 வருடங்களாக அங்கு வாழ்கின்ற தமிழ் மக்கள் கஸ்டப்பட்டு உழைத்த பணத்தை அடாவடித்தனமாக மிரட்டிப்பறித்து, புலிகளின் யுத்தத் தேவைகளுக்கும், புலித்தலைவர்களின் ஆடம்பர சொகுசு வாழ்க்கைக்கும் அனுப்பி வந்துள்ளது. அவர்களால் வெளியிடப்படும் ‘உலகத் தமிழர்’பத்திரிகையை, கனடாவில் தமிழர் வீடுகளுக்கு கொண்டு சென்று பலவந்தமாக விற்பனை செய்ததுடன், அதை வாங்க மறுத்தவர்கள் மிரட்டப்பட்டும் வந்துள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ரொறன்ரோவிலும் ஒட்டாவாவிலும் உலகத் தமிழர் இயக்க காரியாலயங்கள் சுற்றி வளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டன. அப்போது அக்காரியாலயங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம், உலகத் தமிழர் இயக்கத்தினூடாக புலிகளுக்கு பெருந்தொகையான பணம் அனுப்ப்படுவது நிரூபிக்கப்பட்டது. அதன் பின்னரும் கூட, அதன் தலைவர் சித்தா சிற்றம்பலம் என்பவர் Toronto Star பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், புலிகளுக்கும் உலகத் தமிழர் இயக்கத்திற்கும் சம்பந்தமே இல்லையென முழுப்பூசனிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மறைக்க முயன்றுள்ளார். இப்பொழுது எல்லாமே புஸ்வாணமாகப் போயுள்ளது.
கனடிய அரசு உலகத் தமிழர் இயக்க விடயத்தில் மிகச்சரியான நடவடிக்கை எடுத்திருந்தாலும், இன்னும் பல விடயங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. கனடாவில் புலிகளின் யுத்த நடவடிக்கைகளுக்கு நிதி சேகரிக்கும் முக்கிய அமைப்பான ‘தமிழர் புனர்வாழ்வு கழகம்’இன்னமும் சட்டபூர்வமாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. அதையும் தடைசெய்தால்தான் புலிகளுக்கு கனடாவிலிருந்து பணம் செல்லக்கூடாது என்ற கனடிய அரசின் நோக்கம் வெற்றி பெறும்.
அமெரிக்கா கூட இதை உணர்ந்துதான் கடந்த வருடம் தனது நாட்டில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தை தடைசெய்தது. அதுமாத்திரமின்றி, கனடாவில் நீண்டகாலமாக செயல்பட்டு வருகின்ற ‘தமிழ் ஈழச் சங்கம்’மற்றும் சில வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ‘கனடிய தமிழ் காங்கிரஸ்’என்பனவும் புலிகளின் பினாமி அமைப்புகளே. அவைகளையும் தடை செய்வதின் மூலமே கனடாவில் வாழ்கின்ற தமிழ் மக்களை புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும். இதைக் கனடிய அரசு செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் அங்குள்ள தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர்.
Average Rating