கனடாவில் இயங்கி வரும் விடுதலைபுலிகளின் உலக தமிழ் இயக்கம் தீவிரவாத அமைப்பாக அறிவிப்பு: சொத்துக்களை முடக்கவும் உத்தரவு
உலக தமிழ் இயக்கத்தை கனடா நாடு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் சொத்துக்களை முடக்கி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கனடா நாட்டில் 1986-ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் இயக்கம் என்னும் தமிழர் அமைப்பு இயங்கி வருகிறது. 2001-ம் ஆண்டு தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்றியப் பின் இந்த அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்த நிலையில், உலகத் தமிழ் இயக்கத்தை கனடா அரசு தீவிரவாத குழு பட்டியலில் சேர்த்து இருக்கிறது. இது பற்றி கனடா நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு மந்திரி ஸ்டாக்வெல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கையில் தீவிரவாத குழுவாக இயங்கும் விடுதலைபுலிகளுக்கு உலகத் தமிழ் இயக்கம் முன்னணி அமைப்பாக இருந்து தீவிர ஆதரவு பிரசாரம் செய்து வருகிறது. மேலும் நிதி திரட்டி பல்வேறு வழிகளிலும் உதவுகிறது. ஆகவே இந்த அமைப்பு தீவிரவாத குழு பட்டியலில் சேர்க்கப்பட்டு, கனடாவில் இயங்கிட தடை விதிக்கப்படுகிறது. மேலும் உலகத் தமிழ் இயக்கத்தின் சொத்துக்களையும், வங்கிக் கணக்குகளையும் முடக்கி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கனடா நாட்டு வங்கிகள், இன்சூரன்சு கம்பெனிகள், கடன் வழங்கும் அமைப்புகளுக்கு தெளிவான தகவல் அனுப்பப்பட்டு இருக்கிறது. உலகத் தமிழ் இயக்கத்தின் வங்கிக் கணக்கு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு கிடைத்த வலுவான ஆதாரங்களுக்குப் பின்பே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. எனவே, உலகத் தமிழ் இயக்கத்துடன் யாரும் தனியாகவோ, கூட்டாவோ இணைந்து செயல்படவும் தடை விதிக்கப்படுகிறது. மேற்கண்டவாறு ஸ்டாக்வெல் கூறினார்.
One thought on “கனடாவில் இயங்கி வரும் விடுதலைபுலிகளின் உலக தமிழ் இயக்கம் தீவிரவாத அமைப்பாக அறிவிப்பு: சொத்துக்களை முடக்கவும் உத்தரவு”
Leave a Reply
You must be logged in to post a comment.
are you happy?…wait and see….