ரஜினிகாந்த்தை சந்திக்கும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு..!!
ரஜினிகாந்த் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் தினமும் காலை 7 மணியில் இருந்து மாலை 3 மணிவரை இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. கடந்த மே மாதம் திருச்சி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், கரூர் உள்பட 15 மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.
விடுபட்ட சென்னை, காஞ்சீபுரம், வேலூர், மதுரை, விழுப்புரம் உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை தற்போது மீண்டும் சந்திக்க இருக்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் இந்த சந்திப்பு நிகழ்ச்சி தொடங்குவதால் முதல் நாளில் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் அழைக்கப்பட உள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் தொலைவில் உள்ள மாவட்டங்களின் நிர்வாகிகள் அழைக்கப்படுகிறார்கள்.
சென்னை மாவட்ட நிர்வாகிகளை கடைசியாக 30 மற்றும் 31 ஆகிய இரண்டு தேதிகளில் சந்திப்பார் என்று தெரிகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மன்ற பணிகளில் தீவிரமாக செயல்படும் 400 அல்லது 500 பேரை தேர்வு செய்து புகைப்படங்களுடன் மாவட்ட தலைவர்கள் ரசிகர்மன்ற தலைமைக்கு அனுப்பி உள்ளனர்.
அந்த பட்டியலை பரிசீலித்து ரஜினிகாந்தை சந்திப்பதற்கான இறுதிபட்டியல் தயாராகி உள்ளது. தினமும் 4 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1000 நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்கிறார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். பின்னர் மண்டபத்திலேயே ரசிகர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டர் மூலம் புகைப்படங்கள் பிரிண்ட் போடப்பட்டு உடனுக்குடன் ரசிகர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ரஜினிகாந்தை சந்திக்க வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அடையாள அட்டைகளுடன் வரும் ரசிகர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக போட்டோ ஒட்டிய அடையாள அட்டைகள் வினியோகிக்கப்படுகின்றன. குடும்பத்தினரை அழைத்து வரக்கூடாது. ரஜினிகாந்த் காலில் விழக்கூடாது என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ரசிகர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவது குறித்த முடிவை அறிவிப்பார் என்றும் அடுத்த மாதம் தனிக்கட்சி தொடங்குவார் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ராகவேந்திரா மண்டபத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Average Rating