டெஸ்ட் கிரிக்கட் தரநிலை: அவுஸ்திரேலியா, முரளிதரன், சங்ககார முன்னிலை..
சர்வதேசக் கிரிக்கட் சபையின் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கான தரநிலையில், அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னணியிலுள்ளது. அதேவேளை துடுப்பாட்டத்தில் குமார் சங்ககாரவும், பந்துவீச்சில் முத்தையா முரளிதரனும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இலங்கை அணி வீரர்களாவர். டெஸ்ட் கிரிக்கட் விளையாடுகின்ற நாடுகளின் தரநிலையை சர்வதேசக் கிரிக்கட் சபை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அதில் தொடர்ந்தும் அவுஸ்திரேலியா முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இரண்டாமிடத்தை இந்தியா பிடித்துள்ளது. இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திலுள்ளது. இந்தியா அண்மைக்காலத்தில் திறமையாக விளையாடி வருகின்ற போதிலும், அவுஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ள முடியவில்லை. துடுப்பாட்ட வீரர்களுக்கான தரநிலையில் இலங்கையின் குமார் சங்ககார முதலாமிடத்தையும், மேற்கிந்தியத்தீவுகளின் சிவ்நாராயன் சந்தர்போல் இரண்டாமிடத்தையும், இதுவரை முதலாமிடத்திலிருந்து வந்த அவுஸ்திரேலியாவின் மைக்கல் ஹசி முன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர். குமார் சங்ககார இரண்டாவது தடவையாக முதலிடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சாளர்களுக்கான தரநிலையில் தொடர்ந்து 15 மாதங்களுக்கும் அதிகமாக இலங்கை அணியின் முத்தையா முரளிதரனே முதலிடத்திலிருந்து வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் தென்னாபிரிக்காவிக் டேவ் ஸ்ரெயின் இருக்கின்றார். மூன்றாமிடத்தை அவுஸ்திரேலியாவின் ஸ்ரூவட் கிளார்க் பிடித்துள்ளார்.
Average Rating