3 யு.எஸ். ஹெலிகாப்டர்களை தலிபான்கள் கடத்தினர்
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளுக்காக கொண்டுவரப்பட்ட 3 ஹெலிகாப்டர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்தினர். அதில் ஒரு ஹெலிகாப்டரை அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றுவிட்டனர். பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட 3 ஹெலிகாப்டரின் பாகங்கள் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு வந்தன. அவை சரக்குப் பெட்டக லாரியில் ஏற்றப்பட்டு, பெஷாவர் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தன. பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் பழங்குடியினர் பகுதி வழியாக சென்ற போது அந்த சரக்குப் பெட்டக லாரிகளை தலிபான் தீவிரவாதிகள் மடக்கி, அதில் இருந்த ஹெலிகாப்டர் பாகங்களை எடுத்துச் சென்றனர். அப்போது பாகிஸ்தான் துணை நிலை ராணுவத்தினர் தலிபான்களைத் தாக்கியபோதும், இரவு நேரமானதால் அவர்களால் தடுக்க முடியவில்லை. தலிபான்கள் தாக்கியதில் துணை நிலை ராணுவத்தினர் பலர் இறந்தனர். கடத்தப்பட்ட 3 ஹெலிகாப்டர்களில் ஒரு ஹெலிகாப்டரை ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஒரு உள்ளூர் படைத் தலைவருக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றுவிட்டனர். மற்ற 2 ஹெலிகாப்டரின் பாகங்கள் பாகிஸ்தானில் பழங்குடியின பகுதியில் மறைத்துவைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் அந்த இடத்தின் மீதுதான் அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த விவரங்களை பாகிஸ்தான் அதிகாரிகளோ அல்லது அமெரிக்கத் தூதரக அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. கடத்தப்பட்ட ஹெலிகாப்டர் பாகங்களை எப்படியாவது மீட்குமாறு பாகிஸ்தான் அரசை அமெரிக்க ராணுவம் கேட்டுள்ளது. தலிபான்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பாகிஸ்தானின் புதிய அரசு அந்தத் தீவிரவாதிகளுடன் சமாதான பேச்சு நடத்துவதாகவும் இது குறித்து அமெரிக்கா கவலை அடைந்திருப்பதாகவும் நியூஸ் டெய்லி பத்திரிகை கூறுகிறது.
Average Rating