ஜப்பானில் கடந்த வருடம் 33,000 பேர் தற்கொலை
கடந்த வருடம் ஜப்பானில் 33,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானின் தேசிய பொலிஸ் பிரிவு நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2007 ஆம் ஆண்டில் 33,093 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த 2003 ஆம் ஆண்டில் 34,427 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும், அதற்கடுத்ததாக 2007 இலேயே அதிகமானோர் தற்கொலை செய்துள்ளதாகவும் ஜப்பான் தேசிய பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. குடும்பப் பிரச்சினைகள், கடன்தொல்லை, மனஅழுத்தம், நோய்கள் போன்ற காரணிகளாலேயே அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, நீண்ட காலமாக ஜப்பான் இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருவதாகவும், தம்மால் இயன்றவரை தற்கொலைகளைத் தடுப்பதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்துவருவதாகவும் ஜப்பான் அரசாங்கத்தின் பிரதம பேச்சாளர் நபுதாகா மசிமுரா தெரிவித்துள்ளார். உலகில் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்ற நாடுகளில் ஜப்பான் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating