நயன்தாரா வழியை பின்பற்றும் ஓவியா..!!
‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த ஓவியா, தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், `கலகலப்பு’ அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.
சமீபத்தில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல ரசிகர்களை கவர்ந்தார். தற்போது ஓவியாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ராகாவா லாரன்சுடன் ‘காஞ்சனா 3’ படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர விஷ்ணு விஷாலுடன் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடிய ஓவியா, தன்னுடைய அடுத்தப் படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் தான் அடுத்து நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ஓவியா கூறியிருக்கிறார்.
சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க நடிகைகள் ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். குறிப்பாக நயன்தாரா நடித்த ‘டோரா’, ‘மாயா’, ‘அறம்’ ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அதுபோல், ஓவியாவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படத்தில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Average Rating