புலிகளுடன் பேச்சுவார்த்தை : சிறிலங்க அரசு நிபந்தனை!
“வன்முறையை நிறுத்திக் கொள்வதாக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எழுத்துப்பூர்வமான உறுதியளித்தால்” பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சிறிலங்க அரசு நிபந்தனை விதித்துள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன!
விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்க அரசிற்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்கும் முயற்சியில் நார்வே ஈடுபட்டுள்ளதாகவும், தங்களைச் சந்தித்த நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கரிடம் சிறிலங்க அரசின் பேச்சுவார்த்தை குழுத் தலைவர் நிமல் சிறீபால டி சில்வாவும், அயலுறவு அமைச்சகத்தின் செயலர் பாலியக்காராவும் இவ்வாறு கூறியதாக கொழும்புவில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் கூறியுள்ளது.
“தங்களது குழு நடத்திவரும் படுகொலைகளை நிறுத்திக் கொள்வதாக சிறிலங்க அரசிடமும், கொடை நாடுகளிடமும், அமைதி முயற்சியை மேற்கொண்டு வரும் நார்வேயிடமும் பிரபாகரன் உறுதியளிக்க வேண்டும்” என்று சிறிலங்கா தரப்பு கூறியதாக டெய்லி மிர்ரர் செய்தி கூறுகிறது.
வன்முறையை நிறுத்த ஒப்புக்கொண்ட பிறகு விடுதலைப் புலிகளின் துப்பாக்கியில் இருந்து ஒரே ஒரு தோட்டா சுடப்பட்டாலும் போர் நிறுத்தத்தில் இருந்து சிறிலங்க அரசு விலகிவிடும் என்று நார்வே தூதரிடம் சிறிலங்க அரசின் பாதுகாப்பு பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல்லா கூறியதாகவும் டெய்லி மிர்ரர் செய்தி கூறுகிறது.
எங்கே, எப்பொழுது பேசவேண்டும் என்பதையும் சிறிலங்க அரசுதான் முடிவெடுக்கும் என்றும் ரம்புக்வெல்லா கூறியுள்ளதாக அச்செய்தி கூறுகிறது.