இஸ்லாமிய பெண்கள் இருவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரினார் ஒபாமா
அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள பாரக் ஒபாமா இஸ்லாமிய பெண்கள் இருவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கருப்பினத் தலைவரான பாரக் ஒபாமா போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரம் நடைபெற்றபோது, பர்தா அணிந்தபடி இரண்டு முஸ்லிம் பெண்கள் அதில் கலந்துகொண்டனர். அவர்கள் ஒபாமாவின் பின்னால் நிற்பதற்கு பிரச்சார குழு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை வெளியேற்றியது. இது இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பிரச்சாரக்குழு மன்னிப்பு கோரியது. ஆனால் ஒபாமா தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோர வேண்டும் என்று அமெரிக்க இஸ்லாமிய கவுன்சில் கோரிக்கை விடுத்தது. இதை தொடர்ந்து பாரக் ஒபாமா தனிப்பட்ட முறையில் அந்த இஸ்லாமிய பெண்கள் இருவரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு மன்னிப்பு கோரியதாக ஒபாமாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Average Rating