பார்வதி மேனனுக்கு பாலியல் மிரட்டல் – கேரள போலீசில் புகார்..!!
மலையாள திரையுலகின் முன்னணி நடிகை பார்வதி. கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் `காஸபா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் `உத்தமவில்லன்’, `மரியான்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிகை பார்வதி சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது `காஸபா’ படம் பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார்.
குறிப்பாக இந்த படத்தில் பெண்களுக்கு எதிரான வசனங்கள் இடம் பெற்றிருப்பதாகவும், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறினார்.
நடிகை பார்வதியின் விமர்சனம் குறித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கருத்து பதிவிட்டனர். விமர்சனங்களும் குவிந்தன. சிலர் நடிகையை பகிரங்கமாக மிரட்டினர். இதற்கு நடிகை பார்வதி டுவிட்டரில் பதில் அளித்து வந்தார்.
இதற்கிடையே நடிகை பார்வதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகைகள் ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் ஆகியோர் பற்றியும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்கள் பதிவிடப்பட்டன.
நடிகை பார்வதிக்கும், சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களுக்கும் இடையே நடந்த கருத்துப் போர் ஒரு கட்டத்தில் எல்லை மீறியது. நடிகை பார்வதி பற்றி அவதூறு கருத்துக்களும் பதிவிடப்பட்டன.
இதனால் அதிர்ந்து போன நடிகை பார்வதி நேற்று, கேரள போலீஸ் டி. ஜி.பி. லோக்நாத் பெக்ராவை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில், சமூக வலைத்தளங்களில் சிலர் தன்னை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்திருப்பதாகவும், இன்னும் சிலர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
நடிகை பார்வதியின் புகார் குறித்து கொச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று முதல் விசாரணை தொடங்கியது. முதல் கட்டமாக டுவிட்டர் நிறுவனத்திடம் இது குறித்த தகவல்களை தருமாறு போலீசார் கேட்டுள்ளனர். மேலும் கருத்து பதிவிட்ட நபர்களை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating