லண்டனில் இலங்கை தூதரக கணக்காளரிடம் புதிய முறையில் கொள்ளை
லண்டன் ஸ்ரீலங்கா உயர் ஸ்தானிகர் அலுவலகத்தைச் சேர்ந்த கணக்காளர் ரஞ்ஜித் பெரேரா வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இடைவழியில் வைத்து அவரை ஒருசில நபர்கள் வழிமறித்து அவரிடம் அந்தச் சந்தர்ப்பத்தில் பறித்துக்கொள்ளக்கூடியதாக இருந்த சுமார் நாலாயிரம் பவுண்ஸ் தொகையைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 17 ஆம் திகதி பட்டப்பகலில் நடந்துள்ளது. இதுபற்றி ஸ்தானிகர் அலுவலக கணக்காளர் ரஞ்ஜித் பெரேரா அலுவலகத்துக்கு அறிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப அவர் தினமும் லண்டன் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்துக்குட்பட்ட படிங்ரன் பகுதியிலுள்ள எச்.எஸ்.பி.சி. வங்கிக் கிளைக்குச் சென்று அலுவலகத் தேவைகளுக்காக பணம் எடுத்து வருவதாகவும், வங்கி நெடுந்தூரம் இல்லாத காரணத்தால் இவ்வாறு வழமையாக அவர் வங்கிக்குச் சென்று பணத்தை எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு நடந்தே வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சம்பவ தினமாகிய 17 ஆம் திகதி பி.ப. 2.30 மணியளவில் அவர் வங்கிக்குச் சென்று பணத்துடன் திரும்பிக் கொண்டிருந்தபோது அதனை அவதானித்த குறித்த கொள்ளையர்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்து அவருடைய கோட்டின் பின்பக்கம் மை ஊற்றப்பட்டுக் கறைபடிந்திருப்பதாகக் கூறியுள்ளனர். அவர்களுடைய பேச்சுக்குக் கவனம் கொடுக்காது கணக்காளர் பெரேரா அலுவலகத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தார் மீண்டும் அவரை நெருங்கிய கொள்ளையர்கள் அவருடைய கோட்டில் உள்ள மையை ஒற்றி எடுக்கும்படி “”ரிஸு’ கடதாசியைக் கொடுத்தாராம்.
அதை மறுத்த கணக்காளர் அவருடைய கோட்டின் பின்பக்கம் மைக்கறை உண்மையில் உள்ளதா என்று அறிந்துகொள்வதற்காக கோட்டைக் கழற்றியுள்ளார். உடனே, மேற்படி கொள்ளையர்களில் ஒருவர் கோட்டை அவரிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ஓடினாராம். அந்த நபரைத் துரத்திக்கொண்டு கணக்காளரும் பின்னால் ஓடியுள்ளார். ஆயினும், அந்த நபர் வாகனம் ஒன்றில் ஏறித் தப்பியோடிவிட்டாராம். இவ்வாறு கொள்ளையர் பிடுங்கிச் சென்ற கோட்டுப் பையினுள்ளேயே மேற்படி வங்கியிலிருந்து எடுத்துவந்த சுமார் 4000 பவுண்ஸ் இருந்ததாகவும் இவ்வாறு பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் வெள்ளை இனத்தவர்களே எனவும் கணக்காளர் உயர் ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அறிவித்துள்ள தகவலில் கூறியுள்ளார்.
Average Rating