வித்தக கவிஞரின் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர்..!!
வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமாக வெளியிடும் திரைப்படம் ‘ஆருத்ரா’. இதில் நடிகர் பா.விஜய், கே.பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன், மும்பையை சேர்ந்த மாடலிங் மங்கை தக்ஷிதா, கொல்கத்தாவைச் சேர்ந்த மேகாலீ, ஹைதராபாத்தைச் சேர்ந்த சோனி ஆகிய மூன்று பேர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் நடிகர் விக்னேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், மயில்சாமி, அபிசேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்திற்கு ‘இளைஞன்’ படப்புகழ் பி.எல்.சஞ்சய் ஒளிப்பதிவு செய்ய, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைக்கிறார். ‘ஸ்ட்ராபெர்ரி’ படப்புகழ் ஷான் லோகேஷ் எடிட்டிங் மேற்கொள்ள, சண்டை பயிற்சியை கணேஷ் கவனிக்கிறார். படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ‘வித்தக கவிஞர்’ பா விஜய்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசும் போது,’ ஸ்ட்ராபெர்ரியைத் தொடர்ந்து என்னுடைய இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படம். எமோஷனல் வித் க்ரைம் திரில்லராக ‘ஆருத்ரா’ உருவாகியிருக்கிறது. ஸ்ட்ராபெர்ரியில் எப்படி ஒரு சமூக கருத்தை அழுத்தமாக பதிவு செய்தேனோ அதே போல் இந்த ஆருத்ராவிலும் சமூகக்கருத்து ஒன்றை அக்கறையுடன் மையப்படுத்தியிருக்கிறேன். இப்படத்தை அனைத்து பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளுடன் அவசியம் பார்க்கவேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இதில் பொறுப்புணர்வுடன் பேசப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இப்படத்தின் டீஸரை வரும் புத்தாண்டு அன்று துபாயில் வெளியிடுகிறோம். அதனைத் தொடர்ந்து படத்தின் ஆடியோவையும், டிரைலரையும் வெளியிடவிருக்கிறோம். இப்படத்தை பொங்கலுக்கு பிறகு வெளியிட திட்டமிட்டு வருகிறோம். இதனை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் வெளியிடுகிறது.’ என்றார்.
Average Rating