திருமணப் பதிவுக்காக 51 இலங்கை ஜோடிகள் மீண்டும் திருமணம்
அரசின் சலுகையைப் பெறுவதற்காகவும், மீண்டும் இலங்கை செல்லும்போது சிக்கல் ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவும், 51 இலங்கை அகதி ஜோடிகள் தங்களது குழந்தைகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே உள்ள அணைக்கட்டு முகாமில் ஏராளமான இலங்கை அகதிகள் உள்ளனர். இவர்களில் பல அகதிகள் முகாமுக்கு வந்த பின்னர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இதைப் பதிவு செய்யாமல் இருந்து வந்தனர். இதன் காரணமாக, இவர்களுக்கு அரசின் பல சலுகைகள் கிடைக்காமல் இருந்து வந்தது. மேலும் எதிர்காலத்தில் இலங்கை செல்லும்போது திருமணப் பதிவுச் சான்றிதழ் இருந்தால்தான் மனைவியரோடு இலங்கை திரும்ப முடியும் என்ற நிலையும் உள்ளது. இதையடுத்து அணைக்கட்டு முகாமில் உள்ள 51 ஜோடிகள் மீண்டும் திருமணம் செய்யும் வைபவம் முகாமில் நடந்தது. ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ காந்தி முன்னிலையில் 51 ஜோடிகளும், மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு பதிவேட்டில் கையெழுத்திட்டு தங்களது திருமணத்தைப் பதிவு செய்து கொண்டனர். இந்த திருமண வைபவத்தில் அகதிகள் முகாமைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட ஜோடிகளின் குழந்தைகளும் திரண்டு வந்து தங்களது பெற்றோரின் திருமணத்தைப் பார்த்து ரசித்ததுதான் இதில் ‘ஹைலைட்’டான அம்சம்.
Average Rating