கொழும்பில் கைது செய்யப்பட்ட குண்டு வெடிப்புக்களுடன் சம்பந்தப்பட்ட சூத்திரதாரி புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் தேவதாசன்
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களின் சூத்திரதாரியான புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் தேவதாசன் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைப்பட இயக்குனர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு பல்வேறு பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தேவதாசன் உதவி புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் விசேட பொலிஸ் படைப்பிரிவொன்றே அவரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்ட தற்கொலைப்புலி உறுப்பினர் ஒருவரிடம் கிடைக்கப் பெற்ற தகவல்களை கொண்டு குறித்த முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்புத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவதாசனே கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை பின்னணியில் இருந்து இயக்கியவரென்றும் குண்டுத்தாக்குதல்களுக்குரிய வலையமைப்பின் முக்கிய புள்ளி என்பதும் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவNர் நேற்றுமாலை கொட்டாஞ்சேனையில் வைத்து கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் கொட்டாஞ்சேனை சுப்பர் மார்க்கட்டில் முதலாம் மாடியில் உள்ள அவரது கடை ஒன்றிலிருந்தே தற்கொலைதாரிகள் தயார்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம் பெற்ற தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற பேரில் இவர் கைது செய்யப்பட்டதாகவும் கொட்டாஞ்சேனை சுப்பர் மார்க்கட் முதலாம் மாடியில் கடை ஒன்று இருப்பதாகவும், அங்கிருந்தே இவர் தற்கொலை குண்டுதாரிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார் எனவும் பாதுகாப்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது. தேவதாசன் வழங்கிய தகவல்களை அடுத்து உடனடியாகவே 9.5 கிலோ சீ 4 ரக வெடிமருந்தையும் கிளைமோர்க் குண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் ஒன்றரைக் கிலோ இரும்பு உருளைகளும் வெடிக்க வைக்கும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Average Rating