இன்று மாலை ஜெயலலிதா போராட்டம்: 13 கட்சி தலைவர்கள் பங்கேற்பு
`சிக்குன் குனியா’ நோயால் 150 பேர் பலியாகி விட்டனர். “இது பரவுவதை தடுக்க தமிழக அரசு தவறி விட்டதை கண்டித்து போராட்டம் நடைபெறும்” என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அ.தி.மு.க.வுடன் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் இணைந்து இதை நடத்துகின்றன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் திருமாவளவன், இந்திய ïனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் தாவூத்மியாகான், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் மணிகண்டன், சமூக நீதி கட்சி தலைவர் ஜெகவீரபாண்டியன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத், அகில இந்திய குடியரசு கட்சி தலைவர் தாமோதரம், கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் ஜோசப் பெர்னாண்டோ, கிறிஸ்தவ மக்கள் கட்சி தலைவர் மதியநல்லு, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் இசக்கிமுத்து ஆகிய 13 கட்சி தலைவர்கள் தொண்டர்களுடன் பங்கேற்கிறார்கள்.
ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் மெமோரியல் ஹால் அருகே இன்று மாலை 4 மணி அளவில் நடக்கிறது. இதுபோல தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. உள்ளிட்ட 13 கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் கையாலாகாத கருணாநிதி அரசை கண்டிக்கிறோம்; சிக்குன் குனியாவால் மக்கள் மாண்டதுபோதும் கருணாநிதி ஆண்டது போதும், தி.மு.க. அரசே காப்பாற்று காப்பாற்று தமிழக மக்களை காப்பாற்று, ராஜினாமா செய், ராஜினாமா செய். மக்களை காக்காத மைனாரிட்டி அரசே ராஜினாமா செய்’ என்பன போன்ற கோஷங்கள் முழங்கப்படுகின்றன.