நவாஸ் ஷெரீப் தகுதி இழந்ததாக கோர்ட்டு தீர்ப்பு: இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி அற்றவர் என லாகூர் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் முஸ்லிம்லீக் கட்சி தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் ஆட்சியை தான் முஷரப் ராணுவப்புரட்சி மூலம் கவிழ்த்தார். அப்போது ராணுவத்தளபதியாக இருந்த முஷரப் பயணம் செய்த விமானத்தை கடத்தியதாக நவாஸ்ஷெரீப் மீது 1999-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அவருக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் தான் சவுதி அரேபியாவின் தலையீடு காரணமாக அவர் அந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டார். சமீபத்தில் அவர் நாடு திரும்பிய நிலையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு கிரிமினல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. தேர்தலில் முஷரப் ஆதரவு கட்சி தோல்வி அடைந்தது. மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம்லீக் கட்சியும் வெற்றி பெற்றது. இதனால் அவர் வருகிற வியாழக்கிழமை நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்து லாகூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அவர் இடைத்தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை என்று கூறி அவர் போட்டியிடுவதற்கு தடை விதித்தது. இந்த தீர்ப்பை சதித்திட்டம் என்றும் அரசியல் முடிவு என்றும் நவாஸ் ஷெரீப்பின் செய்தி தொடர்பாளர் சித்திக்குல் பாரூக் கூறினார். நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் பஞ்சாப் முதல்-மந்திரியாக இருக்கிறார். அவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த மனு மீது தீர்ப்பு கூறப்படும் வரை அவர் பதவியில் தொடரலாம் என்றும் தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.
Average Rating