மகனின் தண்டுவடத்தை முறித்து விட்டனர்!: வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா குமுறல்
சிறையில் செய்த சித்திரவதையால் தனது மூத்த மகன் தாரிக் ரஹ்மானுக்கு தண்டுவடம் முறிந்துள்ளதாக, வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், இங்குள்ள சிகிச்சையால் தனது மகனை குணப்படுத்திட முடியாது. அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டும். இதனால் அவரை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். காலிதா ஜியா இவ்வாறு குற்றம்சாட்டியுள்ள நிலையில், அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றும், தாரிக் ரஹ்மான் தண்டுவட முறிவால் துடியாய் துடிப்பதாக தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த காலிதா ஜியா, தனது இரு மகன்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கும் முன் ஆரோக்கியமாக இருந்தனர். ஆரம்பத்தில் நீதிமன்ற விசாரணைக்கு கம்பீரமாக நடந்து வந்தனர். ஆனால், தற்போது இருவரும் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு நீதிமன்றத்துக்கு நடந்து வரக்கூட தெம்பு இல்லை எனக், குறிப்பிட்டிருந்தார். காலிதா ஜியாவின் இரண்டாவது மகனான அராஃபத் ரஹ்மானும் தான் சிறையில் கடுமையாக சித்ரவதை செய்யப்படுவதாக அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி எந்தளவுக்கு கொடுமையையும், துன்பத்தையும் அனுபவிக்க வேண்டியுள்ளது என்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். வங்கதேச இடைக்கால அரசு, காலிதா ஜியா மற்றும் அவரது இரு மகன்களையும் கடந்த ஆண்டு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating