தூங்கிப் போன பைலட்டுகள் -தப்பிய 100 பயணிகள்
மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தின் இரு பைலட்டுகளும் தூங்கிவிட்டனர். இதனால் விமானம் மும்பையைத் தாண்டி கோவா அருகே வந்துவிட்டது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த 15 நாட்களாகிவிட்ட நிலையில் இப்போது தான் வெளியில் தகவல் கசிந்துள்ளது. துபாயிலிருந்து மும்பை கிளம்பிய IC 612 என்ற அந்த ஏர் இந்தியா விமானத்தில் 100 பயணிகள் இருந்தனர். துபாய் நேரப்படி இரவு 1.35 மணிக்கு இந்த விமானம் கிளம்பி, இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. இதையடுத்து அங்கிருந்து மும்பை கிளம்பியது. ஆனால், கிளம்பிய சிறிது நேரத்தில் ஆட்டோ பைலட்டை இயக்கிவிட்டு முதலில் ஒரு பைலட் தூக்கத்தில் ஆழ்ந்தார். இதைத் தொடர்ந்து துணை பைலட்டும் தூங்கிவிட்டார். விமானம் ‘A 474 South route’ என்ற பாதையில் சென்று கொண்டிருந்தது. விமானத்தை இயக்கியது ஆட்டோ பைலட். இந் நிலையில் மும்பை வான் வெளியில் இந்த விமானம் நுழைந்தது. அப்போது, மும்பை விமான நிலையத்தின் தரைக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் பறக்கும் உயரத்தைக் குறைக்குமாறு விமானிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தனர். ஆனால், அவர்களிடமிருந்து பதில் இல்லை. மும்பை விமான நிலையத்திற்கு 100 மைல் தொலைவில் வரும்போதே உயரத்தைக் குறைக்க ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், அந்த விமானம் தொடர்ந்து அதிக உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இதனால் விமானம் கடத்தப்பட்டு விட்டதோ என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதையடுத்து SELCAL (selective calling) என்ற முறையை பயன்படுத்தி விமானத்தை தரைக் கட்டுப்பாட்டு பிரிவினர் தொடர்பு கொண்டனர். இந்த முறையை பயன்படுத்தினால் விமானிகளின் காக்பிட் அறையில் அலாரம் ஒலிக்கும். இதை அவ்வளவு சீக்கிரத்தில் பயன்படுத்திவிட மாட்டார்கள். அதே போல SELCAL அலாரம் ஒலிக்கவே அதைக் கேட்டு திடுக்கிட்டு இரு விமானிகளும் விழித்துள்ளனர். இவர்களை எழுப்புவதற்குள் விமானம் மும்பையைத் தாண்டி கோவாவுக்கு பாதி தூரம் வரை போய்விட்டது. இதையடுத்து விமானத்தை திருப்பி மும்பையில் பத்திரமாக தரையிறக்கினர் இரு விமானிகளும். இந் நிலையி்ல் இந்த சம்பவத்தை பூசி மொழுகும் வகையில் புதிய ‘திரைக்கதையை’ ஏர்-இந்தியா எழுதி வருவதாகத் தெரிகிறது. விமானத்தின் தொலைத் தொடர்பில் பழுது ஏற்பட்டதாக ‘கதை’ ரெடியாகி வருகிறது.
Average Rating