நவாஸ் ஷரீப் தேர்தலில் போட்டியிட தடை கூடாது: பாகிஸ்தான் அரசு மேல் முறையீடு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்து லாகூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்யும் என்று அந்நாட்டின் சட்ட அமைச்சர் பரூக் நயீக் நாடாளுமன்றத்தில் கூறினார். ஜூன் 26-ம் தேதி நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் போட்டியிட நவாஸ் ஷரீப் திட்டமிட்டிருந்தார். அவர் போட்டியிட லாகூர் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் இதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் அதிபர் முஷாரபையும் கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். நாடாளுமன்றத்தில் பேசிய சட்ட அமைச்சர் பரூக், நவாஸ் ஷரீபுக்கு விதித்தத் தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்யும் என்றார். நவாஸ் ஷரீப் மேல்முறையீடு செய்ய மாட்டார் என்று அவரது கட்சியின் செய்தித் தொடர்பாளர் சித்திக் கூறியபோதிலும், சட்ட அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Average Rating