செங்கலடி பிரதேசத்தில் ஈ.பி.டி.பியை வெளியேறுமாறு ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலிருந்து ஈ.பி.டி.பி.யை உடனடியாக வெளியேறுமாறு கோரி பிரதேச மக்கள் கடந்த 23ம் திகதி முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை தொடங்கியுள்ளனர். அண்மையில் மூன்று பேர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹர்த்தால் காரணமாக பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கடைகள், காரியாலயங்களின் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் தெரிவி;க்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு இந்த ஹர்த்தாலை முன்னெடுப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஈ.பி.டி.பி.யினர் பிரதேசத்தின் வியாபாரிகளை கடத்திச் சென்று பல்வேறு துன்புறுத்தல்களை மேற்கொள்வதாக பிள்ளையான் குழுவின் ஏறாவூர் பிரதேச சபையின் ருத்ரா மாஸ்டர் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி.யினர் குறித்த பிரதேசத்தைவிட்டு வெளியேற வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான், பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கடித மூலம் அறிவித்துள்ளார் என ருத்ரா மாஸ்டர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.. கடத்தல்களை மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்த ஹர்த்தால் பிள்ளையான் குழுவினரால் பிரதேச வாசிகள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Average Rating