சீனா: போதை மருந்து விற்பனை; மேலும் 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
போதை மருந்து விற்றதாக கைதான மேலும் 6 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது சீனா. இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை போதை மருந்துக்கு எதிரான சர்வதேச தினத்தன்று நிறைவேற்றப்பட்டது. போதை மருந்தை உற்பத்தி செய்து விற்பனை செய்ததாக யூனான் மற்றும் ஹெனான் உள்ளிட்ட மாகாணங்களில் கைதான இந்த 6 பேருக்கும் உள்ளூர் நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தன. இதை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் மனுவை நிராகரித்து, சரியான தீர்ப்பு என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை நிறைவேற்றலாம் என்று தீர்ப்பளித்திருந்தது. இதன்படி இவர்கள் அனைவரையும் கும்பலாக வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சீனாவில் போதை மருந்து கடத்தியதாகவோ, விற்றதாகவோ, அல்லது தயாரித்ததாகவோ, அல்லது பதுக்கி வைத்திருந்ததாகவோ ஒருவர் கைதானால் அவருக்கு 7 ஆண்டு சிறையோ அல்லது மரண தண்டனையோ வழக்கின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப விதிக்கப்படும்.
Average Rating