பெரியமடுப் பகுதி இராணுவத்தினர் வசம்; 40 புலிகள் பலி
மன்னாரில் நடைபெற்றுவரும் கடும் மோதலின் மத்தியில் பெரியமடுப் பகுதியை கைப்பற்றியுள்ளதாகக் கூறும் படையினர் அப்பகுதியில் நடைபெற்ற மோதல்களில் 40க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பெரியமடுப் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்ற கடும் மோதலையடுத்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை படையினர் பெரியமடுப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றியதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி பெரியமடுக் குளத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் கைப்பற்றிய படையினர் 12 நாட்களின் பின் பெரியமடுவையும் அதனைச் சுற்றி சுமார் ஏழு சதுர கிலோமீற்றர் பகுதிகளையும் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சமரில் 15க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் படையினர் கூறியுள்ளனர். இதேநேரம், பெரியமடுவுக்கு வடக்கே சிறாட்டிகுளம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற மோதலில் பெருமளவு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதில் 24 சடலங்களைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் படையினர் கூறியுள்ளனர். இந்த மோதல்களில் ரி.56 ரகத் துப்பாக்கிகள்20, 12.7 மி.மீற்றர் விமான எதிர்ப்புத் துப்பாக்கி1, ஆர்.பி.ஜி. 2, எல்.எம்.ஜி. 1 என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்ற மோதல்களில் 124 புலிகளும் 12 படையினரும் கொல்லப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, வியாழக்கிழமை வவுனியா பாலமோட்டையில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 8 படையினர் கொல்லப் பட்டுள்ளதுடன், 24 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating