டவுட் கார்னர்?
நள்ளிரவில் எந்தக் காரணமுமின்றி சொந்த விருப்பத்துக்காக ஊர் சுற்றலாமா? இதற்கென ஏதேனும் கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா? காவல் துறையினருக்கு அது குறித்து விசாரிக்கும் உரிமை இருக்கிறதா?
– எஸ்.அனாமிகா, அண்ணாநகர்.
பதிலளிக்கிறார் வழக்கறிஞர் அஜிதா…
ஆண், பெண் யாராக இருந்தாலும் நள்ளிரவு நேரத்தில் தாராளமாக ஊர் சுற்றலாம். இதை மறுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. நள்ளிரவில் ஊர் சுற்றுவது சட்டத்துக்குப் புறம்பான செயல் இல்லை. ஆனால் ஊர் சுற்றுவதற்கான நோக்கம் சட்டத்துக்கு புறம்பானதாக இருக்கக் கூடாது. அப்படியாக ஊர் சுற்றுபவர்களிடம் காவல் துறையினர் எச்சரிக்கை உணர்வை மட்டும்தான் ஏற்படுத்த வேண்டும். அதாவது கடலில் ஆழம் அதிகமுள்ள பகுதியில் குளிப்பதைத் தடுப்பது போல், நள்ளிரவு நேரத்தில் வன்முறையாளர்களால் அவர்களுக்கு பாதிப்பு வரலாம் என்று அவர்களின் நலன் சார்ந்து பேசலாம்.
நள்ளிரவில் பெண் ஊர் சுற்றுவதை இச்சமூகம் தவறான கண் கொண்டே பார்க்கிறது. அப்படியான பார்வையுடன் காவல் துறையினரும் தங்களது விசாரணையை மேற்கொள்ளக் கூடாது. நள்ளிரவில் ஊர் சுற்றும் பெண் நடத்தை கெட்டவள் ஆகி விட மாட்டாள் என்பதை இங்கு எல்லோரும் உணர வேண்டும். நள்ளிரவில் ஊர் சுற்ற வேண்டாம் என பெண்களின் நலன் சார்ந்து கூறுவதுமே கூட அவர்களுக்கான பாதுகாப்பை அளிக்க முடியாது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம்தான்.
நாட்டில் குடிகாரர்கள், வன்முறை யாளர்கள், திருடர்கள் நிறைந்து காணப்படும் சூழலில் தன் நலன் கருதி பாதுகாப்பு நடவடிக்கைகளை பெண்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படித்தான் இப்போதும் நடக்கிறது. ஆக, உங்களது பாதுகாப்புக்கு எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதால் நீங்கள் கவனமாக இருங்கள் என எச்சரிக்கை செய்யலாமே தவிர ஒரு பெண்ணின் நடத்தை குறித்து விசாரிப்பதற்கு காவல்துறைக்கு எந்த உரிமையும் இல்லை. பெண் ஊர் சுற்றுவது குற்றம் என சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பெண்கள் மட்டுமில்லை ஆண்களுக்கும் இது பொருந்தும்.
Average Rating