குடிபோதையில் வெறிச்செயல் பிரம்பால் தலைமை ஆசிரியர் தாக்கியதில் 10 மாணவர் காயம்: அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகை!!
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கூட்டப்பள்ளி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் (45), நேற்று மதியம் குடிபோதையில் பள்ளிக்கு வந்து பிரம்பால் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில், 6ம் வகுப்பு மாணவர் சக்திவேலுக்கு மணிக்கட்டு பகுதியில் எலும்பு முறிந்தது. இதுகுறித்து சக மாணவர்கள் கொடுத்த தகவலின்பேரில், பள்ளிக்கு வந்த பெற்றோர், மாணவனை அழைத்துச் சென்று பள்ளிபாளையம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதேபோல், பள்ளியில் படிக்கும் காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர் சாகுல் அமீது, 8ம் வகுப்பு மாணவர்கள் ஏழுமலை, கவியரசு, 7ம் வகுப்பு மாணவர் விபின் சமன், 6ம் வகுப்பு மாணவர்கள் ரஹ்மான், சஞ்சய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர், தலைமையாசிரியர் தாக்கியதில் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை அறிந்து ஆவேசமடைந்த பெற்றோர்கள், உடனடியாக பள்ளிக்கு விரைந்து முற்றுகையிட்டனர். இதையறிந்த தலைமை ஆசிரியர், அங்கிருந்து தப்பியோடி விட்டார். காயமடைந்த மாணவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பெற்றோர், பின்னர் மாணவர்களுடன் சென்று திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.மேலும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Average Rating