முஷரப், துருக்கி நாட்டில் தஞ்சம் அடைவாரா? சர்தாரி பயணத்தால் புதிய பரபரப்பு
பாகிஸ்தான் அதிபர் முஷரப், துருக்கி நாட்டில் தஞ்சம் அடைவார் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொது தேர்தலில் அதிபர் முஷரப் ஆதரவு பெற்ற கட்சி தோல்வி அடைந்தது. பெனாசிர் கட்சி, ஆட்சியைப் பிடித்தது. அதிலிருந்து முஷரப், அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று பரவலாக பேசப்படுகிறது. முஷரப்பை நீக்க சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக பெனாசிரின் கணவர் சர்தாரி சமீபத்தில் தெரிவித்தார். கடந்த 1999-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப்பை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்த முஷரப், அவரை சவூதி அரேபியா நாட்டில் தஞ்சம் புக வைத்தார். அதேபோல், முஷரப்பை பதவியில் இருந்து நீக்கி ஏதாவது ஒரு வெளிநாட்டில் தஞ்சம் அடைய வைக்க பாகிஸ்தான் அரசு விரும்புவதாக தெரிகிறது. பாகிஸ்தானை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்று முஷரப் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் துருக்கி நாட்டில் தஞ்சம் அடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெனாசிரின் கணவரும், ஆளுங்கட்சியின் தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, துருக்கி நாட்டுக்கு 6 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். துபாயில் தனது குடும்பத்தினரை சந்திக்க சென்ற அவர், அங்கிருந்து துருக்கி சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் அப்துல்லா குல், தய்யிப் எர்டோகன் ஆகியோரை அவர் சந்தித்து பேசுகிறார். அப்போது, முஷரப் துருக்கியில் அரசியல் தஞ்சம் அடைய சம்மதிக்குமாறு அவர் கேட்டுக்கொள்வார் என்று கூறப்படுகிறது. இதுபற்றி பாகிஸ்தானில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நவாஸ் ஷெரீப் கட்சி வெற்றி
இதற்கிடையே, கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் நவாஸ் ஷெரீப் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. 5 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 23 மாகாண சபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் நவாஸ் ஷெரீப் கட்சி, 3 பாராளுமன்ற தொகுதிகளையும், 8 மாகாண சபை தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது. பெனாசிர் கட்சி 2 பாராளுமன்ற தொகுதிகளையும், 7 மாகாண சபை தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது.
Average Rating