முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை கொள்ளை!!
வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பெண்ணிடம், பைக் ஆசாமிகள் முகவரி கேட்பது போல் நடித்து 4 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர். கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் கோவர்த்தன். இவரது மனைவி முத்துலட்சுமி (55). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர், முத்துலட்சுமியிடம் முகவரி கேட்பது போல் நடித்து, அவர் கழுத்தில் கிடந்த 4 சவரன் செயினை பறித்துக்கொண்டு, அவரை கீழே தள்ளிவிட்டு தப்பினர்.
இதில், முத்துலட்சுமிக்கு கழுத்து, தலையில் காயம் ஏற்பட்டது. அவர் அலறி கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து முத்துலட்சுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு போய் சேர்த்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
கொடுங்கையூர் பகுதிகளில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ரோந்து போலீசார் தொடர் பணியில் இருக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Average Rating