இந்தியாவில் இருந்து கோழி, முட்டை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தற்காலிக தடை!!
இந்தியாவில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்ய சவுதி அரேபிய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகள் சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவின் தசரகள்ளி கிராமத்தில் கோழிகளிடம் பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பதை உலக கால்நடை சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
கால்நடை சுகாதாரத்துக்கான உலகளாவிய அமைப்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 950 கோழிகளில் 9 கோழிகள் பறவைக்காய்ச்சலால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதன் சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும், கோழிகள், கோழி இறைச்சிகள், மற்றும் முட்டைகளுக்கு தற்காலிகமாக தடை விதித்து சவுதி அரேபிய வேளாண்துறை அமைச்சகம் வியாழனன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பால் இந்தியாவின் கோழி ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
Average Rating