சந்திரபாபு நாயுடுவிடம் பணிந்தது ஆந்திராவுக்கு மத்திய அரசு 1,269 கோடி நிதி ஒதுக்கீடு: போலாவரம் திட்டத்துக்கு 417 கோடி!!
மத்திய பட்ஜெட்டில் தனது மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக ஆந்திர அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போலாவரம் நீர்பாசன திட்டம் உட்பட இம்மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1,269 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டியும், இம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்பி.க்கள் தொடர் போராட்டம் நடத்தினர். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் இடம் பெற்றுள்ள நிலையில், இந்த போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றால், கூட்டணியில் இருந்து விலகப் போவதாகவும் அக்கட்சி அறிவித்தது.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கோபத்துக்கு மத்திய அரசு நேற்று பணிந்தது. அவரை திருப்திப்படுத்தும் விதமாக ஆந்திராவின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு நேற்று ரூ.1,269 கோடி நிதி ஒதுக்கியது. இதில், போலாவரம் நீர்பாசன திட்டத்துக்காக ரூ.417.44 கோடியும், மாநில பிரிவினை வருவாய் பற்றாக்குறை மானியத்தின் கீழ் ரூ.369.16 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியமாக ரூ.253.74 கோடியும், அங்கன்வாடி சேவை திட்டம் மற்று–்ம் துணை ஊட்டச்சத்து திட்டத்துக்காக ரூ.196.92 கோடியும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்காக ரூ.31.76 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நடத்திய போராட்டத்தின் போது, நிதி ஒதுக்கும்படி தெலுங்கு தேசம் எம்பி.க்கள் முன்வைத்த திட்டங்களில் போலாவரம் நீர்பாசன திட்டமும் ஒன்றாகும்.
அதற்கு தற்போது நிதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகு, இதற்காக ரூ.7,200 கோடியை செலவழித்து இருப்பதாக ஆந்திர அரசு கூறி வருகிறது. இதில், இதுவரை ரூ.4,329 கோடியை மத்திய அரசு திருப்பித் தந்துள்ளது. இம்மாநிலத்தை சேர்ந்த நிதியமைச்சர் யனமலா ராமகிருஷ்னுடு, கடந்த மாதம் அருண் ஜெட்லியிடம் அளித்த மனுவில், போலாவரம் திட்டத்துக்காக ஆந்திர அரசு செலவழித்த தொகையில் இன்னும் ரூ.3,217.63 கோடியை மத்திய அரசு கொடுக்க வேண்டியிருப்பதாகவும், அதை உடனடியாக வழங்கும்படியும் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating