வவுனியாவில் தேங்காய்க்குள் வெடிபொருள் கடத்திய பெண் கைது
இலங்கையின் வடக்கே வவுனியாவில் தேங்காய்க்குள் சி4 ரகத்தைசேர்ந்த சக்தி வாய்ந்த வெடிப்பொருளைக் கடத்திச்செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படும் தேங்காய் வியாபாரியான பெண் ஒருவரை வீதிச் சோதனையின்போது, வவுனியா பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். வவுனியா சிதம்பரபுரத்திலிருந்து வவுனியா நகருக்கு வந்த பேருந்து ஒன்றில் கொண்டுவரப்பட்ட மூட்டை ஒன்றிற்குள் இருந்த தேங்காய்களுக்குள் 4 கிலோ எடையுடைய வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். நான்கு தேங்காய்களுக்குள் இந்த வெடிப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இதனையடுத்து வியாபாரியான அந்தப் பெண்ணையும் அவரை ஏற்றி வந்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். அதேவேளை வவுனியா மடுக்கந்தை – அம்பலாங்கொடல்ல என்ற கிராமத்தில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரது வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 8 கிளேமோர் கண்ணிவெடி குண்டுகள், ஒரு அமுக்கவெடி மற்றும் 6 கைக்குண்டுகள் உட்பட்ட பல வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது. வைரவப்புளியங்குளத்தில் வீடொன்றில் சில வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உள்ளான ஒரு இளைஞன் கொடுத்த தகவலை அடுத்தே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதாக படைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இளைஞனையும், முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் தமிழ்ப் பெண்ணான அவரது மனைவியையும் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating