மொங்கோலியாவில் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பொலிஸாருக்கு மிடையிலான மோதலில் 5 பேர் பலி
மொங்கோலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளில் 5 பேர் பலியாகியுள்ளனர். இத்தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாகக் கூறியே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 130 இற்கும் அதிகமான பொலிஸாரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் காயமடைந்துள்ளதாகவும் நூற்றுக் கணக்கானோர் தலைநகர் உலான்படாரிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தலைநகரின் ஒரு பகுதிக்கான போக்குவரத்துகள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், 4 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் நடைபெற்ற வன்முறைகளில் தற்போது ஆட்சியிலிருக்கும் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி பொலிஸார் இறப்பர் குண்டுகளையும் கண்ணீர் புகைக்குண்டுகளையும் பிரயோகித்த அதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது கற்களை வீசியுள்ளனர். மக்களை அமைதி காக்குமாறு நாட்டின் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். மொங்கோலிய மக்கள் புரட்சிகர கட்சியானது அரைவாசிக்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இத் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாக எதிர்க்கட்சி தெரிவிக்கின்றது. இந்நிலையில், தேர்தல் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்றதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating