கொலம்பியா நாட்டில் 6 வருட காலமாக போராளிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த அதிபர் வேட்பாளர் உள்ளிட்ட பிணைக் கைதிகள் அதிரடி மீட்பு
கொலம்பியா நாட்டில் 6 வருட காலமாக போராளிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த அதிபர் வேட்பாளர் உள்ளிட்ட பிணைக் கைதிகளை அந்நாட்டு ராணுவம் அதிரடியாக மீட்டுள்ளது. உளவுத் துறையினர் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு, ஆயுத பிரயோகம் செய்யாமலேயே போராளிகளை ஏமாற்றி, பிணைக் கைதிகளை ஒப்படைக்க வைத்துள்ளனர். கொலம்பியாவில் ஃபார்க் எனும் இயக்கம் அரசை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறது. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த இயக்கமானது கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் அதிபர் வேட்பாளர் பெட்டன் கோர்ட் மற்றும் 3 அமெரிக்க சுற்றுலாப் பயணிகளை பிணைக் கைதிகளை பிடித்து வைத்திருந்தது. அரசுடனான பேச்சுவார்த்தையில் இந்த பிணைக் கைதிகளை வைத்துக் கொண்டு போராளிகள் பேரம் பேசி வந்தனர். இவர்களை விடுவிக்கும் முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை. இந்நிலையில் நேற்று கொலம்பியா ராணுவம் அதிரடி திட்டம் ஒன்றை வகுத்தது. அதன்படி உளவுத்துறையினர் போராளிகள் பதுங்கியிருந்த பகுதியில் ஊடுருவி அந்த இயக்கத்தின் தலைவரோடு பேச்சுவார்த்தை நடத்த வந்திருப்பதாக கூறினர். இதனையடுத்து போராளிகள் பிணைக் கைதிகளோடு பேச்சு நடத்தும் இடத்திற்கு வந்தனர். அப்போது பிணைக் கைதிகள் அதிரடியாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆயுதப் போராட்டம் எதுவுமின்றி பிணைக் கைதிகள் மீட்கப்பட்டனர். அமெரிக்க பயணிகள் உடனடியாக அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிபர் வேட்பாளரான பெட்டன் கோர்ட் தான் மீட்கப்பட்டது நம்ப முடியாததாக இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். பிணைக் கைதிகள் மீட்பு போராளிகளுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
Average Rating