வசீம் அக்ரமின் பந்துவீச்சு சாதனையை முறியடிப்பதே இலக்கு: முரளிதரன்
ஒருநாள் கிரிக்கட்டில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை நிலைநாட்டுவதே தனது தற்போதைய இலக்கு என்று இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம் இதுவரை 502 விக்கட்டுக்களை ஒருநாள் போட்டிகளில் கைப்பற்றியுள்ளார். இதுவே சாதனையாக இருக்கின்றது. வசீம் அக்ரம், 356 ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் விளையாடி 502 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இந்த இலக்கை அடைவதற்கு முரளிதரனுக்கு இன்னும் 31 விக்கட்டுக்களே தேவைப்படுகின்றன. இதுவரை 308 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள முரளிதரன் 472 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார். தற்போது ஆசியக் கிண்ணப் போட்டிகளில் அவர் கலந்துகொண்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் சேன் வோர்னிடமிருந்து, முரளிதரன் கைப்பற்றியிருந்தார். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள வோர்ன் 708 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார். ஆனால், முரளிதரன் தொடர்ந்தும் விளையாடி வருகின்றார். அவர் இதுவரை, 735 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கட் போட்டிகள் இரண்டையும் சேர்த்து 1000 விக்கட்டுக்களை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையை முத்தையா முரளிதரன் பெற்றுள்ளார். இதனிடையே, டெஸ்ட் போட்டிகளில் 1000 விக்கட்டுக்களை கைப்பற்றுவதே தனது அடுத்த இலக்கென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating