ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது; ராணுவ வீரர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள்
அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினார்கள். ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா தலைமையில் அதன் நட்பு நாடுகளின் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்டு மாநிலத்தில் தலீபான் தீவிரவாதிகள், ராணுவத்துக்கு எதிராக கடும் போர் புரிந்து வருகிறார்கள். அங்கு கிட்டத்தட்ட 70 ஆயிரம் வெளிநாட்டு ராணுவ வீரர்கள் தங்கி இருந்து கடும் யுத்தம் நடத்தி வருகிறார்கள். நேற்று அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றை தீவிரவாதிகள் சுட்டனர். அது மிக தாழ்வாக பறந்து தரைக்கு அருகே வந்தபோது அதை தலீபான்கள் தாக்கினார்கள். இதில் ஹெலிகாப்டர் சேதம் அடைந்தது. விமானி திறமையாக ஹெலிகாப்டரை தரை இறக்கினார். அதில் இருந்த ராணுவ வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக தரை இறங்கினார்கள். அதன்பிறகு அது தீப்பிடித்தது இந்த சம்பவம் லோகார் மாநிலம் கார்வார் மாவட்டத்தில் நடந்தது. இதில் யாருக்கும் பலத்த காயம் ஏதும் இல்லை. தீவிரவாதிகள் இருக்கும் ஒரு சில இடங்களில் லோகார் மாநிலமும் ஒன்று ஆகும். இந்த வாரத்தில் இதுபோல நடக்கும் 2-வது சம்பவம் இது ஆகும். குனார் மாநிலத்தில் ஏற்கனவே ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் இல்லை. இதற்கு முன்பு பலமுறை தலீபான்கள் ராணுவ ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். தீவிரவாதிகளின் கைகளுக்கு ஏவுகணைகள் இன்னும் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்து விட்டால், அது போரின் போக்கையே மாற்றி விடும். ரஷிய ஆக்கிரமிப்பு ராணுவத்துக்கு எதிராக நடந்த போரில், விடுதலை போராட்ட தீவிரவாதிகள் கைகளில் ஏவுகணைகள் கிடைத்ததும் போரின் போக்கே மாறிவிட்டது.
Average Rating